இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

உடல் நலனும் உணவுமுறையும்

உடல் நலனும் உணவுமுறையும்
At மே 28, 2024
உணவு, உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கான ஆற்றலாக விளக்குகிறது. ஒவ்வொரு உயிரினமும் எடுத்துக்கொள்ளும் உணவானது, அவைகளின் வகை, செயல்பாடுகள், சூழல் மற்றும் இதுபோ‌ன்ற பிற காரணிகள் தீர்மானிக்கின்றன. இவைகள் எடுத்துக் கொள்ளும் உணவானது இயற்கையாக கிடைக்கிறது. இது உணவு சுழற்சியை உருவாக்குகிறது. ஆனால், மனித இனத்திற்கு மட்டுமே, தான் விரும்பும் உணவை உண்ணும் திறன் உள்ளது. 

அறிவியல் வளரும் முன், மனிதர்கள் தங்களின் வாழ்விட சூழ்நிலைக்கேற்ப வளரக்கூடிய மற்றும் தங்கள் பகுதிகளில் கிடைக்கக்கூடிய காய்கள், பழங்கள் மற்றும் தானிய வகைகளை உணவாக எடுத்து வந்தனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக தெரிந்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கங்கள் பல.

அவற்றுள், ஒன்றுதான், உணவு பழக்கத்தில் ஏற்படுத்திய மாற்றமும் அதனால் விளையும் பல தாக்கங்களும்.

உணவை பசிக்காக சாப்பிடுவதை காட்டிலும் என்று ருசிக்காக சாப்பிட பழகினோமோ, அன்றிலிருந்து உடல் உபாதைகள் ஏற்பட்டு, நாளடைவில் பல நோய்களுக்கு காரணமாக அமைந்துவிட்டது. 

அதுமட்டுமின்றி, உடலுக்கு தேவையான உணவை காட்டிலும் குறைவாகவோ அதிகமாகவோ எடுத்துக் கொள்வது மற்றும் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது. இவைகளும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணமாக அமைகிறது.

குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை, உணவில் வீட்டு முறை சமையல் முதல் கடை உணவு வரை, சிற்றுண்டி முதல் தலைவாழை விருந்து வரை என அனைத்திலும் உணவில் சுவை நிறம் மற்றும் மனம் ஆகியவற்றை கூட்டுவதற்கு, பல்வேறு வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய உணவு தர கட்டுப்பாடுகள் மூலம் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத அல்லது குறைந்த தீங்கு விளைவிக்க கூடிய, உணவு தர வேதிப்பொருட்களை பயன்படுத்த வேண்டும், என்று அறிவுறுத்தினாலும். அவை வேதிப்பொருட்களே என்பதை மறந்து விடக்கூடாது.

அறிவியல் கோட்பாடுகளின் படி எந்த ஒரு வினைக்கு எதிர்வினை உண்டு மற்றும் வேதியலில் சமநிலை என்பது மிகவும் முக்கியமானவை.

உலகில் உள்ள எந்த ஒரு பொருளும் அணுவால் ஆனது என்று விவரிக்கும் அறிவியல் கோட்பாடுகள், நம் உடலும் அணுக்களால் ஆன வேதியல் சமநிலையுடைய உயிரினம் தான் என்று விவரிக்கிறது.

அப்படி இருக்கையில் நமது உடலானது, வேதியல் மற்றும் வேதிப்பொருட்களை அளவுக்கதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது, அதனால் ஏற்படும் எதிர்வினை. நமது உடலில் சமநிலை மாற்றி பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது உண்மைதானே... இதை எவராலும் மறுத்துவிட முடியுமா... 

அதனால் தான், நம் முன்னோர்கள், "அளவிற்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு!" என்ற பழமொழியை, நம் மனதில் விதைத்து விட்டு சென்றனர்.

அதிக அளவு கொழுப்பு உள்ள உணவுகள், அதிக நிறம் உடைய உணவுகள், பாக்கெட்டுகள் அடைக்கப்பட்ட துரித உணவுகள், புட்டிகளில் அடைக்கப்பட்ட வண்ண வண்ண குளிர்பானங்கள் என பலவிதமான உணவுகள், இன்றைய கால சூழலுக்கு உடல் உழைப்பும் இல்லாத வாழ்க்கை முறை, இவைகள் எல்லாம் நம் உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றுவதை குறைத்து, நம் உடலுக்கு தேவையற்றவையாக தங்கி விடுகிறது.

வெளிநாட்டு மோகத்தால்!... வெளிநாடுகளில் உண்ணக்கூடிய உணவுகளை, நம் நாட்டிலும் உண்டு மகிழ்வது. இதில் புகைப்பிடித்தல் மற்றும் மது போன்ற பழக்கங்கள், நமது உடல் ஆரோக்கியம் மிகவும் சீரழிந்து வருகிறது... இதுபோன்ற மோகத்தால், இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை பெருமையாக, பொழுதுபோக்காக என்று பயன்படுத்த துவங்கி, அன்றாட வாழ்வில் இன்றியமையாததாக அளவிற்கு மக்களின் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

புகைப்பழக்கம் மது குடித்தல் இது போன்ற பழக்கங்கள் இல்லாதவர்களை அந்நியர்கள் போல மக்கள் பார்க்க துவங்கி விட்டனர். காரணம், திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள், குழுவாக மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது போன்றவை சமூக அங்கீகார செயல்பாடாக, மக்களுக்கு காட்சி தோற்றம் ஏற்படுத்துவதே இதற்கு அடித்தளமாக அமைகிறது.

ஆனால் உண்மையில், உணவு பழக்கத்திற்கும் மனிதநேயத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை, தமிழர் பாரம்பரியத்தில் அறியலாம். இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், திருவள்ளுவர் இயற்றிய "விருந்தோம்பல்" என்ற அதிகாரமே ஒரு சாட்சி.

நம் தமிழர் பாரம்பரியத்தில், அறுசுவை உணவு படைத்து அனைவருக்கும் சமமாக விருந்து படைத்து விருந்தோம்பல் செய்தவர்கள்.

இன்றைய காலத்தில் கடைகளில் கிடைக்க கூடிய துரித உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் கிடைக்கக்கூடிய உணவுகளுக்கு நம் பாரம்பரிய உணவுகளுக்கு சளைத்தது அல்ல...

இதோ நம் தமிழர் பாரம்பரிய தின்பண்டங்கள்:
1. கடலை மிட்டாய்,
2. எள் உருண்டை,
3. அதிரசம்,
4. இஞ்சி மரப்பா(குமட்டலை குறைக்க),
5. பல வகை முறுக்கு பண்டங்கள்,
6. பானகம்,
7. பழச்சாறு வகைகள்...

என சொல்லிக் கொண்டே செல்லலாம்...

இதில் நமது அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி வகைகளில், பெரும்பாலும் வெளிநாட்டு வகை காய்கறிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளும் இடம் பிடித்து விட்டன.

நம் தமிழர் பாரம்பரிய உணவு பழக்கத்தில் இடம் பிடித்த காய்கறி, கிழங்கு, தானியம், பருப்பு மற்றும் பழ வகைகளின் பட்டியல்:
1. அவரைக்காய், 
2. கோவைக்காய், 
3. கொத்தவரங்காய்,
4. முருங்கைக்காய்,
5. தட்டைக்காய்,
6. புடலங்காய்,
7. சுரைக்காய், 
8. வெண் பூசணி, 
9. பூசணிக்காய்,
10. வாழைக்காய்,
11. வெண்டைக்காய்,
12. தேங்காய்,
13. சுண்டக்காய், 

இன்னும் பல...

கிழங்கு வகைகளில்:
1. உருளைக்கிழங்கு,
2. சேனைக்கிழங்கு,
3. குச்சிக்கிழங்கு,
4. கருனைக்கிழங்கு,
5. சர்க்கரைவள்ளி கிழங்கு,

என இன்னும் பல,

சிறு தானியங்கள்:
1. இராகி,
2. கம்பு,
3. சோளம்,
4. கேழ்வரகு,
5. சாமை,
6. திணை,
7. குதிரைவாலி,

பருப்பு வகைகள்:
1. கடலை பருப்பு,
2. உளுந்து,
3. பாசிப்பருப்பு,
4. பயத்தம் பருப்பு,
5. கொண்டை கடலை,
6. பச்சைப்பயிறு,
7. கொள்ளு,
8. துவரம் பருப்பு,

இன்னும் பல...

நம் பாரம்பரியத்தில் பல கனிகளும் பழவகைகளும் இருக்கிறது, என இவ்வாறு சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இதை வைத்து பல எண்ணற்ற வகையான உணவு வகைகளை உருவாக்க முடியம். இவைகள் வெவ்வேறு வகையான சுவைகளையும் அனுபவத்தையும் தரக்கூடியது. வெவ்வேறு வகைகளில் உடலுக்கு நன்மை தரக்கூடியது.

அவரவர் விருப்பப்பட்ட உணவை உண்பதற்கு உணவு சுதந்திரம் இருந்தாலும், தரமற்ற உணவினை எடுத்துக் கொண்டால், நம் உடல் நல பாதுகாப்பு பரிபோகம் வாய்ப்பு உள்ளது.

உடல் ஆரோக்கியம் கெட்டபின், மருத்துவர்களிடம் சென்று அவதிப்படுவதை விட அதை முன்னெச்சரிக்கையாக நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது அவரவர் கடமை.

இதைத்தான் திருவள்ளுவர் மக்களுக்கு திருக்குறள் வாயிலாக தெரிவித்திருக்கிறார். 

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

இதன் பொருள் அறிந்தவர்கள், நஞ்சு என அறிந்த உணவை உண்ண, மனம் அஞ்சு வேண்டுமல்லவா...

எனவே நம் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு, ஆரோக்கியத்துடன் நல்ல முறையில் நாம் வாழ வேண்டும்.


Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக